Saturday, June 15, 2013

டிரெக்கிங் டைரி - தடியண்டமோள் - 1



ரொம்ப நாளாக ட்ரெக் போக வேண்டும் என்று ஆபீசில் பக்கத்து Cubicle ல் உட்கார்ந்து கொண்டு பேசிப் பேசியே என் மனதில் ஏற்றி விட்டு விட்டான் Parthiban Ramar (எ) பார்த்தி . உசுப்பேற்றி விட்டால் நாம் சும்மா இருப்போமா ? அந்தப் பக்கமாக பாஸ் போகும் வரும் போதும் எங்களைப் பார்த்து முறைக்கும் அளவுக்கு ட்ரெக்கிங் ஸ்தலங்களைப் பற்றி ரிசர்ச். விக்கிபீடியா எங்களைப் பார்த்து " டேய் போதும் டா ...என்னை விட்டுடுங்கடா .." என்று கதறாதது தான் பாக்கி.

தேடித் தேடி இறுதியாக குடகு மலையிலிருக்கும் "தடியண்டமோள் " மலையைப் பிடித்தோம்.விக்கிபீடியா பெருமூச்சு விட்டது. இங்கே தடியண்டமோளைப் பற்றி சில வார்த்தைகள். (ஜியாகரபியாக்கும்) .கர்நாடகாவின் குடகு மாவட்டத்தில் இருக்கும் உயரமான மலை. கர்நாடகாவிலேயே மூன்றாவது உயரமான சிகரம். 1748 மீட்டர் உயரம். (சரி . ஜியாகரபி போதும்). இப்படியான பெருமைகள் நிறைந்த அந்த மலையை ஏறிப் பார்ப்பதென்றூற் முடிவு செய்யப்பட்டது. (இன்னும் உயரமான மலைகளெல்லாம் எங்கள் பரிசீலனையில் வந்தாலும் முதல் தடவையிலேயே நாக்கு தள்ளி டிரெக்கிங் கனவுக்கு குழி வெட்டியது போலாகி விடக் கூடாதென்று ஜாக்கிரதையாக இந்த மலையை தேர்வு செய்து விட்டோம்)

அடுத்து ஆள் சேர்க்கும் படலம். முதலில் Nirmal Sundarrajan. விஷயத்தை சொன்னவுடன் மன்மோகன் சிங் போல் கன்னம் சொறிந்து வெகு நேரம் யோசித்து "ஒ கே டா" என்றான். அடுத்து மௌன சாமியார் Rakesh Kumar.அவனிடம் கேட்கவெல்லாம் இல்லை. "டேய்...உனக்கும் சேர்த்து டிக்கட் போடறோம்.வந்து சேரு .." அவ்வளவு தான். அடுத்து அகோரி சாமியார் Keerthi Raj . "சார்...நீங்க வரீங்களா ?" என்றதும் வாயிலிருந்து வார்த்தை உதிர்க்காமல் தலையை மட்டும் பெரிதாக ஆட்டினார். சாமியின் அருள் கிடைத்ததும் அடுத்து Saravana Sagadevan. "போலாம் மச்சி." என்றான் உற்சாகமாக. எங்களுக்குத் தான் பென்சிலால் கோடு போட்டாற் போலிருக்கும் அவன் உடல்வாகை நினைத்துக் கொஞ்சம் கவலையாக இருந்தது. ஆள் பற்றாக்குறை அந்தக் கவலையையும் மூடி மறைத்து விட்டது.

ஆறு பேர் என்று முடிவானவுடன் பார்த்தி பர பரவென்று டிக்கட் ரிசர்வ் செய்து விட்டான். யாரோ நண்பனின் நண்பனின் நண்பனைப் பிடித்து பெங்களூரில் சேத்தன் என்றொரு டிரைவரைப் பிடித்தான். வண்டி புக் பண்ணி விட்டான்.சனி ஞாயிறில் தப்பித் தவறிக் கூட ஆபீசிலிருந்து போன் எதுவும் வந்து விடாமலிருக்க எல்லா பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்தாயிற்று. அந்த வெள்ளிக் கிழமையும் வந்தது. எல்லாரும் சென்ட்ரலில் ஒன்று கூடினோம்.ஆர்வம், லேசான பரபரப்பு, மிக லேசான அடி வயிற்றுக் கலக்கல் ( பயத்தில் தான்) என்று எங்கள் முதல் டிரெக்கிங் பயணம் அந்த வெள்ளிக் கிழமை இரவு பெங்களூர் போகும் ரயிலில் எதிர்பார்ப்புடன் துவங்கியது.

- தொடரும்

பேட்ரோல் போலீஸ்


இடப் பக்கம் பார்த்தான். வலப் பக்கம் பார்த்தான் கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஆள் நடமாட்டமே இல்லை பெருமூச்செறிந்து நடக்கத் தொடங்கினான் ராக்கி . ராதா கிருஷ்ணன். அந்த ஆபீசில் சேர்ந்து கொஞ்ச நாள் தான் ஆகிறது. அடுத்த நாள் சாயந்திரம் வீக் எண்டுக்கு ஊருக்கு போகப் போவதால் அன்றே முக்கிய வேலைகளை முடித்து விடத் திட்டம் போட்டு வேலை செய்தவன் இவ்வளவு லேட்டாகும் என்று நினைக்கவில்லை. சரி பத்து நிமிட நடையில் தானே ரூம் இருக்கிறது என்று நினைத்ததால் அது அவனுக்குப பெரிய விஷயமாகவும் தோன்றவில்லை. இப்போது தோன்றியது . "ஒழுங்கா ஒம்போது மணிக்கே கிளம்பியிருக்கலாம்". ஒன்பது மணியென்றதும் அம்மாவிடம் போனில் கடுகடுத்தது ஞாபகம் வந்தது. " சாப்டியாப்பா?"
"ஆச்சும்மா".
" எப்ப கிளம்புவ?"
"தெரியலம்மா.. இன்னும் கொஞ்சம் வேலை இருக்கு".
"ரொம்ப லேட் ஆயிடுச்சேப்பா..."
(சிடுசிடுப்புடன்) " என்னம்மா பண்ண சொல்ற... நாளைக்கு ஊருக்கு வரணுமா வேணாமா ...அப்டின்னா இதெல்லாம் பண்ணி தான் ஆகணும் "....
" சரிப்பா ...பார்த்துப் போப்பா.."
" ஏம்மா கடுப்பேத்தற...நான் என்ன சின்னக் குழந்தையா..வைம்மா போனை"
இருந்தாலும் அவ்வளவு கடித்திருக்க வேண்டாம் அம்மாவை.
சுற்றிலும் அமைதி ஊரையே இழுத்துப் போர்த்தியிருந்தது . அவன் ஷூ சத்தம் அவனுக்கே " படீர் படீர்" என்று பிரம்மாண்டமாகக் கேட்டது . அதீத அமைதி முதுகுத் தண்டில் என்னவோ செய்தது .யோசனையோடே நடந்து கொண்டிருந்தவனை பிரேக் போட்டாற்போல் நிற்க வைத்தது அந்த "ஹலோ"......
இடப்புறம் திரும்பிப் பார்த்தான். அவன் இந்த ஊருக்கு வந்து சில நாட்களில் அலுவலகம் செல்லும் போதும் வரும் போதும் துளிக் கூட அவன் கவனத்தை ஈர்க்காத அந்த மெயின் ரோட்டிலிருந்து பிரியும் இடப் புறத் தெருவில் ஒரு போலீஸ் ஜீப் நின்றிருந்தது. அங்கிருந்த கான்ஸ்டபிள் தான். மீண்டும் அழைத்தார்."ஹலோ ...இங்க வாங்க". சென்றான்.
ஜீப்பில் வயர்லஸ் மெலிதாகக் கரகரத்துக் கொண்டிருந்தது. உள்ளே இன்ஸ்பெக்டர் அமர்ந்திருந்தார் .கான்ஸ்டபிள் பேட்ஜை பார்த்தான். முத்துசாமி. முத்துசாமி கேட்டார்.
"யார் சார் நீங்க ? இந்நேரத்துல எங்க போறீங்க"
இல்ல சார் .. ஆபீஸ்லருந்து கிளம்ப லேட்டாயிட்டுது.என் ரூம் இங்க பக்கத்துல தான். அதான் நடந்து போயிட்டிருந்தேன் "
இன்ஸ்பெக்டர் இப்போது கீழே இறங்கி வந்திருந்தார் . அவர் கேட்டார்.
"ஐ டி கார்டு இருக்குதுங்களா?"
காண்பித்தான் .
" ஊருக்கு புதுசா சார்?"
"ஆமா..."
"இந்த ஏரியா ரொம்ப மோசம். இப்படி இனிமே தனியா வர வேண்டாம்.இவ்ளோ நேரமெல்லாம் ஆபீஸ்ல இருக்காதீங்க புரியுதுங்களா?"
"சரி சார்"
"இப்ப நீங்க தனியா போக வேணாம். வாங்க ஜீப்ல ஏறுங்க . டிராப் பண்ணிடறேன் "
"ஐயோ இல்ல சார். என் ரூம் ரொம்ப பக்கம் தான். ஜீப்பெல்லாம் வேணாம்."
யோசித்தார் "சரி. அப்டின்னா ஒண்ணு பண்ணலாம். யோவ் முத்துசாமி ..சார் கூட அவர் ரூம் வரைக்கும் போயிட்டு வந்துடு நான் இங்கேயே இருக்கேன் " என்றார்
" சரி சார்" என்றவர் அவன் பக்கம் திரும்பினார் "வாங்க போலாம்". கிளம்பும் முன் இன்ஸ்பெக்டரின் பேட்ஜை பார்த்தான். முரளிதரன் என்றது
ரூம் அருகில் போய் சேரும் வரை அந்த ஏரியா எவ்வளவு ஆபத்தானது என்பது பற்றியும் தங்கள் பேட்ரோல் ரவுண்ட்ஸ் பற்றியும் பேசிக் கொண்டே வந்தார் முத்துசாமி.ரூம் வந்து விட்டது . நின்றான். "சார் ...ரொம்ப தேங்க்ஸ் ...ரூம் வந்துடுச்சு அதோ அதுதான்" என்று முதல் மாடியைக் காட்டினான் . "சரி சார் ... இனிமே ரொம்ப லேட்டால்லாம் வராதீங்க" என்று நூற்றுப் பத்தாவது முறையாகக் கூறி விட்டு சென்றார் . அறைக்குள் வந்து கதவைத் தாளிட்டுக் கொண்டு முகம் கை கால் கழுவி உடை மாற்றி படுக்கையில் விழுந்தான். என்னவோ நிம்மதியாயிருந்தது இந்த ஏரியா அவ்வளவு மோசமில்லை. நல்ல போலீசெல்லாம் இருக்கிறார்கள் .. தூங்கிப் போனான்.
மறுநாள் காலை சற்றே தாமதமாக அலுவலகம் கிளம்பினான் .அந்த திருப்பத்தைக் கடக்கும் போது தன்னிச்சையாகத் திரும்பிப் பார்த்தான். பகீரென்றது . முதல் நாளிரவு அவன் பார்த்த ஜீப் முற்றிலும் சிதைந்து எலும்புக்கூடாக நின்றிருந்தது. அவனுக்கு குபீரென்று வியர்த்து விட்டது. என்னவோ செய்தது உடனே அந்த இடத்தை விட்டு அகன்றான். அலுவலகத்தில் ஏழாம் பேஸ்து அடித்தாற்போல் அமர்ந்திருந்தவனை உலுக்கினான் பக்கத்து இருக்கைக்காரன் மணி. " பாஸ் ..என்னாச்சு உங்களுக்கு ? காலையில இருந்து ஒரு மாதிரி இருக்கீங்க ?" என்றான் . சட்டென சுதாரித்தவன்,புன்னகைத்தான் "அதெல்லாம் ஒண்ணுமில்ல..."என்றவன் கேட்டான். " ஆமா...உங்ககிட்ட ஒன்ணு கேக்கணும்னு நெனச்சேன். நம்ம ஆபீஸ் வர்ற வழியில ஒரு ஜீப் புல்லா டேமேஜ் ஆகிக் கிடக்கே..அது..." என்று இழுத்தான்.
சட்டென்று மணியின் முகம் மாறியது " நீங்க இன்னிக்கு தான் அதைப் பார்க்கிறீங்களா ....இந்த ஊர்ல அது ரொம்ப பேமஸ் கேஸாச்சே ... நீங்க பேப்பர்ல படிக்கலியா?" என்றான்.
"இல்ல...என்னன்னு சொல்லுங்க "...என்றான் லேசாகத் திணறியபடி
"போன வருஷம் இங்க இருந்த ஒரு சுந்தர்ங்கிற லோக்கல் ரவுடிக்கும் ஏரியா இன்ஸ்பெக்டருக்கும் பிரச்சினை ஆயிடுச்சு. அதுல நைட்டோட நைட்டா ஆளுங்களோட போய் பேட்ரோலுக்காக அங்க நின்னுட்டு இருந்த முரளிங்கற இன்ஸ்பெக்டரையும் முத்துசாமிங்கற கான்ஸ்டபிளையும் ஜீப்போட கட்டி வெச்சு எரிச்சுட்டான். அடுத்த மூணாவது நாளே சுந்தரும் ஹைவேஸ் ஆக்சிடெண்ட்ல செத்துட்டான்" என்று மானிட்டரைப் பார்த்த படியே கதை சொன்னவன் "ஆமா..திடீர்னு ஏன் இதைப் பத்திக் கேக்கறீங்க ?" என்றபடியே திரும்பினான் . ராக்கியைக் காணவில்லை கீழே பார்த்தான். " இவ்வளவு சுருக்காவா மயக்கம் வரும்?"..." ஏய் ...யாரவது தண்ணி கொண்டாங்கப்பா சீக்கிரம் ".......

Thursday, April 11, 2013

எம் மக்கள் .....


அந்த மெனு கார்ட் அற்புதமாக அச்சடிக்கப் பட்டிருந்தது. வழு வழு பக்கங்களில் கட்டளைக்குக் காத்திருந்த பதார்த்தங்கள் வெல்வெட் அட்டை கொண்டு மூடப் பட்டிருந்தன. பதார்த்தங்களின் அருகே அதனதன் விலைகள். அவற்றின் பெயர்களின் கீழே சுருக்கமாக அவற்றின் செய் முறை. செய் முறையின் கடினத் தன்மைக்கேற்ப பண்டத்தின் விலையும்.

மெனு கார்ட் வைக்கப் பட்டிருந்த மேஜையின் ஒரு புறம் சுஜா . மறுபுறம் அந்த கார்டின் ரெட்டைத் தம்பி பிரபு கையில். "ஆர்டர் பண்ணு பிரபு..." என்றாள் சுஜா. சிரிப்பு நிற்காமல் ஓவர்ப்ளோ ஆகிக் கொண்டே இருந்தது.பிரபு தலையை ஆட்டியபடி மெனு கார்டில் ஆழ்ந்திருந்தான். அவன் பார்வை மேயும் இடத்தைக் கண்ட சுஜா முகம் மாறினாள்."பிரபு..." என்று காட்டமாக அழைத்தாள். நிமிர்ந்தான்.

" ஏன் இப்டி பண்ற ...இந்த பழக்கத்தை மாத்தவே மாட்டியா...எனக்கு ப்ரொமோஷன் கெடச்சிருக்கு. ரொம்ப சந்தோஷமா இருக்கேன். அதைக் கொண்டாட ட்ரீட் கொடுக்கலாம்னு கூட்டிட்டு வந்தா நீ என்னடான்னா ஒவ்வொண்ணா விலையைப் பாத்துக்கிட்டு இருக்க..ச்சே...கல்யாணத்துக்கு முன்னால இருந்த மாதிரி தான் இப்பவும் இருக்க." என்று சலித்துக் கொண்டாள். அவள் சூடாவதை உணர்ந்த பிரபு சூழ்நிலையை சகஜமாக்க " சாரிடா... நீயே ஆர்டர் பண்ணு...." என்று புன்னகைத்தான். அவன் புன்னகையில் இரங்கிய சுஜா வெயிட்டரை அழைத்தாள்.
அவள் மென்பொருள் நிபுணி . அவன் சி.ஏ . சாதாரண நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து படித்து மேலே வந்தவர்கள். இன்னும் ஓரிரண்டு அப்ரைசல்கள் பார்த்தால் ஆறிலக்கச் சம்பளம் வாங்கக் கூடிய , வெகு சீக்கிரத்தில் செடான் எனப்படும் சொகுசுக் காருக்கு சொந்தக்காரர்கள் ஆக முயற்சி செய்து வரும் ,கனவுகளைத் துரத்தும், அப்பர் மிடில் கிளாஸ் என்னும் உயர் நடுத்தர வர்க்கத்தின் அதிகபட்ச நிலையை நோக்கி நித்தம் தங்கள் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கும் தம்பதி.
இருவரும் வெகு நிதானமாக ரசித்து ருசித்து டின்னரை முடித்தனர். பில் வந்தது. இரண்டு ஆயிர ரூபாய் நோட்டுக்களை பில் அட்டையில் செருகி விட்டுவிட்டு வெளியே வந்தனர்.ஒன்பதரை மணி. சுற்றுப் புறம் ஓய்ந்திருந்தது. பைக்கை எடுக்கப் போனவர்களின் அருகில் எங்கிருந்தோ வந்தாள் அந்த சிறுமி. அக்கா... பூ வாங்கிக்கோங்கக்கா...முழம் பத்து ரூவா தான்கா..." என்றாள்."வேண்டாம்மா " என்று தவிர்த்தாள் சுஜா. "அந்த பெண் முகம் சட்டென்று வடிந்தது. பிரபுவுக்கு அவளைப் பார்க்கப் பாவமாக இருந்தது. "அக்கா மூணு முழம் தான் இருக்குக்கா ... வாங்கிக்கிட்டா வீட்டுக்கு போய்டுவேன்கா ...அண்ணா சொல்லுங்கண்ணா " என்றாள் இருவரையும் பார்த்து. "வாங்கிக்கோயேன் சுஜா" என்றான் பிரபு.அந்தப் பெண் வைத்திருந்த கூடையைப் பார்த்தாள் சுஜா. பூ பிரஷ்ஷாகவே இருந்தது. "வாங்கினால் என்ன?"..சரி என்பது போல் தலையை அசைத்தாள்.

பாக்கெட்டிலிருந்து காசை எடுக்கப் போன பிரபுவைத் தடுத்தாள். "மூணு முழமும் சேர்த்து இருபது ரூபான்னு குடு. வாங்கிக்கிறேன் " என்றாள் அந்தப் பெண்ணிடம். அந்தப் பெண் பரிதாபமாக பிரபுவை உதவி கோருவதைப் போல் பார்த்தாள். பயனில்லை என்று தெரிந்ததும் சுஜாவிடம் திரும்பினாள். "அக்கா... முழம் பத்து ரூவாக்கா... இருவது ரூவாக்கு மூணு முழம் கட்டாதுக்கா..." என்றாள் கெஞ்சும் தொனியில். முகத்தை மேலும் இறுக்கிக் கொண்டாள் சுஜா. "குடுத்தாக் குடு ...இல்லன்னா வேண்டாம். பிரபு... வண்டிய எடு..." என்று அவசரப்படுத்தினாள்.பிரபு கையைப் பிசைந்தான். அந்தப் பெண்ணும். "அக்கா...." என்று ஈனசுரத்தில் மீண்டும் முனகினாள் அந்தப் பெண். " அட... வேண்டாம்மா ...நீ ரொம்ப கறாரா விலை சொல்ற. எனக்கு கட்டுபடியாகாது. பிரபு ..வண்டியெடுன்னு சொன்னேன்ல.." என்று பொறிந்தாள் சுஜா. சில நொடிகள் என்ன செய்வதென்று தெரியாமல் நின்ற சிறுமி மென்குரலில் " சரிக்கா... குடுங்கக்கா...." என்றாள். சுஜாவிடம் வெற்றிப் பெருமிதம். பிரபு பாக்கெட்டிலிருந்து ரூபாய் நோட்டுக்களை சுஜாவிடம் தந்தான்.அதிலிருந்து இரண்டு பழைய பத்து ரூபாய்களாகப் பார்த்து எடுத்து அந்தப் பெண்ணிடம் கொடுத்தாள்.பூவை வாங்கிக் கொண்டாள்.அந்தப் பெண் நோட்டுகளைத் திருப்பித் திருப்பி பார்த்தபடியே கூடையைத் தூக்கிக் கொண்டு நடந்தது.

வண்டியை ஸ்டார்ட் செய்தான் பிரபு. சுஜா ஏறி அமர்ந்தாள். சந்திரமுகி ரஜினி போல் அவள் முகத்தில் எதையோ சாதித்து விட்ட திருப்தி.கிளம்பும் முன் பிரபு ஒரு முறை திரும்பிப் பார்த்தான். அந்தப் பெண் போய் விட்டிருந்தாள் .

ஜ்யோதி - பார்ட் 2


2136 மார்ச் 23 காலை 9.15 மணி :

அந்த சுருக் இதோடு நான்கைந்து முறைகள் வந்து நின்று விட்டது. அடுத்து வந்தது நிற்காமல் அடம்பிடித்தது. இது அது தான். ரமணிக்குத் தகவல் சொல்ல வேண்டும்.மெல்ல மேஜையை அடைந்து போனை எடுத்து ஒற்றி தகவல் சொல்லி முடிக்கும் போது வலி சம்மணமிட்டு அடிவயிற்றில் அமர்ந்திருந்தது .ரமணி பதறிப் போய் வீடு வந்து சேர்ந்து , பாரதியை தூக்கிக் கொண்டு மருத்துவமனை வந்து சேர்வதற்குள் உயிர் போய் வந்து விட்டது..

2136 மார்ச் 23 காலை 10.30 மணி :

மனம் முழுக்கப் பதற்றம். டாக்டர் லேபர் வார்டிலிருந்து வெளியே வருவதைப் பார்த்ததும் இதயத் துடிப்பு எகிறியது. "கங்கிராட்ஸ் ரமணி... உங்க மனைவிக்கு பெண் குழந்தை பிறந்திருக்கு.எவ்ரிதிங் நார்மல். ரெண்டு பேருமே நலம். நீங்க ரெண்டு பேரும் நினைச்ச படியே எல்லாம் நடந்திருக்கு" புன்னகைத்தபடி கண் சிமிட்டினாள் டாக்டர். ரமணியின் கண்கள் நிறைந்தன. டாக்டரின் கையைப் பற்றிக் கொண்டு "ரொம்ப தேங்க்ஸ் டாக்டர்" என்று உருகினான். "இட்ஸ் ஒகே. " என்று மீண்டும் புன்னகைத்தாள். நீங்க உள்ள போய் உங்க மனைவியையும் குழந்தையையும் பார்க்கலாம்." என்றாள் .

வேகமாக உள்ளே ஓடினான் ரமணி. கட்டிலில் கண் மூடி பாரதி. அருகில் சிணுங்கிக் கொண்டு அழகே உருவான தேவதையாய் ஜ்யோதி. அருகில் சென்று ஆசை தீர அவளை பார்த்தான். அவன் முடிவு செய்தது போலவே கண்கள் , நாசி, நிறம் எல்லாம். பார்க்கப் பார்க்கப் பரவசம் பீறிட்டது . இவன் பார்த்துக் கொண்டே இருக்கையில் மெல்ல கண்களைப் பிரித்தாள் ஜ்யோதி.

ரமணியைப் பார்த்ததும் பொக்கை வாய் மலர்ந்து தன் ரோஜாப் பூக் கைகளை நீட்டியபடி மென் மழலையில் "டாடி" என்றாள்......

ஜ்யோதி

ஜ்யோதி

2136, மார்ச் 23 , காலை 7.30 மணி :

கண்ணைத் திறக்கவே முடியவில்லை. இரவு நன்றாகத் தூங்கியும் ஒரே தலை சுற்றலாக இருந்தது. " ச்சே ! காலையிலேயே இப்படிப் படுத்தறதே ?" சலிப்பாக இருந்தது பாரதிக்கு. மார்னிங் சிக்னஸ். சில மாதங்களாகவே இப்படித்தான்.அடிக்கடி தலைசுற்றல். சில அடிகள் நடந்தாலே மூச்சு இறைக்கிறது. எதைத் தின்றாலும் குமட்டல். ஆனால் படுத்தல் எல்லாம் உடம்புக்குத் தான். மனதுக்கு வெறும் சந்தோஷம் மட்டும் தான். ஒன்பது மாதங்களுக்கு முன்னால் டாக்டர் முன் அமர்ந்திருந்த அந்த கணங்கள் மனதுக்குள் ஓடின. " எடுத்துக்கிட்ட ட்ரீட்மென்ட் வீண் போகல. கன்பர்ம் ஆயிடுச்சு". இந்த வார்த்தைகளுக்குத் தானே இத்தனை வருடத் தவம். சந்தோஷத்தில் கண்ணீரே வந்து விட்டது பாரதிக்கு. பக்கத்தில் அமர்ந்திருந்த ரமணிக்கு பேசவே நா எழவில்லை. அந்த வார்த்தைகள் காதுக்குள் வட்டமிட்ட படியே இருந்தன. அதற்குப் பிறகு டாக்டரின் வழக்கமான அட்வைஸ்கள். கிளம்பும் போது " ரமணி ! இவங்கள நீங்க தான் ஜாக்கிரதையா பார்த்துக்கணும்." என்று புன்னகைத்தாள்.
இருவரும் சந்தோஷத்தில் திக்குமுக்காடினர். சும்மாவா...ஐந்து வருடத் தவம். எத்தனை விசாரிப்புகள், அவமானங்கள், கிண்டல்கள் ....எதில் மாறினாலும் நம்ம ஜனங்கள் இதில் மட்டும் மாறவே மாட்டார்கள்.எல்லாவற்றுக்கும் தீர்வாய் அந்த தேவதை உருவாகி விட்டது. அன்றிலிருந்து பாரதியை தரையில் கால் வைக்க விடாமல் ரமணி தாங்கியதென்ன , எல்லா வேலைகளையும் தானே இழுத்துப் போட்டுக் கொண்டு செய்ததென்ன! நினைக்கும் போதே சிலிர்த்தது பாரதிக்கு.
இருவரும் சேர்ந்து குழந்தைக்குப் பேர் தேடியது வைபவம் தான். ஊரில் உள்ள எல்லாப் பெயர்களையும் துவைத்துக் காயப் போட்டு அலசி ஆராய்ந்தாலும் கடைசியில் அவர்கள் தேர்ந்தெடுத்தது "ஜ்யோதி". பையனாக இருந்தாலும் சரி. பெண்ணாக இருந்தாலும் சரி.

2136, மார்ச் 23, காலை 9 மணி :

"பாரதி....!" ரமணியின் குரல். ரமணி ஆபீஸ் கிளம்பியாயிற்று. அதுதான் குரல். வழக்கமான வார்த்தைகள். " பாரதி ! ஜாக்ரதையா இரு.. எந்த வெயிட்டையும் தூக்காதே... வேகமா நடக்காதே...கதவைத் தாள் போட்டுக்கோ ! " ரமணி சொல்லிக் கொண்டே போக பாரதிக்கு சிரிப்பு வந்தது. " எனக்காகவா இதெல்லாம்? ம் ஹீம் ... எல்லாம் அந்த ஜ்யோதிக்காகத் தான். !" இருந்தாலும் சந்தோஷமாயிருந்தது. நாளையிலிருந்து ரமணி ஆபீசுக்கு லீவ். பாரதியை பக்கத்தில் இருந்து பார்த்துக் கொள்வதற்காம். மீண்டும் சிரிப்பாக வந்தது. கூடவே அடி வயிற்றில் சுருக்கென அந்த வலியும்..........

தொடரும்...


Thursday, March 28, 2013

பாட்டி சொன்ன கதை..

சிறு வயதில் எனக்கு என் பாட்டி சொன்ன கதை இது. இந்தக் கதை தெரியாதவர்கள் அநேகமாக யாரும் இருக்க முடியாது. இருந்தாலும் இன்னொரு முறை இங்கே...

அத்திரிபாச்சா ....

ஒரு ஊர்ல ஒருத்தன் புதுசா கல்யாணமாகி பொண்டாட்டியோட சந்தோஷமா தனிக்குடித்தனம் இருந்தானாம். கொஞ்ச நாள் கழிச்சு அவனுக்கு அம்மாவப் பார்க்கணும்னு ஆசையா இருந்துச்சாம். பொண்டாட்டி கிட்ட சொல்லிட்டுக் கிளம்பினானாம்.

அம்மா வீட்டுக்கு வந்து சேர்ந்தான். அம்மாவுக்கு புள்ளையப் பார்த்ததும் சந்தோஷம் தாங்கல ...இது வரைக்கும் செய்யாத பலகாரமா புள்ளைக்கு செஞ்சு கொடுக்கணும்னு முடிவு பண்ணினா. மணக்க மணக்க சுட சுட ஆசை ஆசையா புள்ளைக்கு கொழுக்கட்டை செஞ்சா .... இலையப் போட்டு கொழுக்கட்டைய எடுத்து வெச்சா. ஒண்ணை எடுத்துக் கடிச்சான் புள்ள. அவ்வளவு தான். அந்த சுவையில மொத்தமா மயங்கியே போய்ட்டான். வேக வேகமா சாப்பிட ஆரம்பிச்சவன் எல்லா கொழுக்கட்டையையும் முழுங்கினப்புறம் தான் ஓய்ஞ்சான். கொஞ்சம் மூச்சு விட்டப்புறம் தான் கேட்டான் " இந்தப் பலகாரத்துக்கு என்ன பேரும்மா" ன்னு .. "கொழுக்கட்டை  ராசா" ன்னா  அவ. "வீட்டுக்குப்  போனதும் பொஞ்சாதிய இந்தப் பலகாரத்த செய்யச் சொல்லி நல்லா வயிறு முட்ட அமுக்கணும்னு நெனச்சிக்கிட்டே கெளம்பினான். பலகரத்தோட பேர் மறந்துடக் கூடாதுன்னு நடக்கும் போது " கொழுக்கட்டை கொழுக்கட்டை கொழுக்கட்டை"ன்னு சொல்லிக்கிட்டே போனான்.
வழியில திடீர்னு ஒரு பெரிய பள்ளம். எகிறிக் குதிச்சுத் தான் தாண்டணும். குதிக்கும் போது  " அத்திரிபாச்சா" அப்படின்னு சொல்லி எகிறிக் குதிச்சான். அவ்வளவு தான். கொழுக்கட்டைங்கிற பேர் மறந்து போச்சு. " அத்திரிபாச்சா அத்திரிபாச்சா அத்திரிபாச்சா"ன்னு சொல்லிக்கிட்டே நடக்க ஆரம்பிச்சிட்டான்.
வீடு வந்து சேர்ந்ததும் பொண்டாட்டி கிட்ட " இந்தா...எனக்கு அத்திரிபாச்சா வேணும் பண்ணிக் குடு" ன்னான். ஏற இறங்க அவனைப் பார்த்தவ " நீ என்ன சொல்றியோ ஒண்ணும் புரியல" ன்னா . திரும்பத் திரும்ப அதையே சொல்லிக்கிட்டு இருந்தான். சூடாகிப் போன பொண்டாட்டி "த.... அதெல்லாம் பண்ணித் தர முடியாது போ" ன்னுட்டா. அவ்வளவு தான். "நான் கேட்டு பண்ண மாட்டேன்னு சொல்றியா...உன்னை என்ன பண்றேன் பாரு" ன்னு கோவமாகி, சாத்தி வெச்சிருந்த உலக்கைய எடுத்து அவளை மொத்து மொத்துன்னு மொத்தினான். குய்யோ முறையோன்னு கத்தினா அவ. சத்தம் கேட்டு பக்கத்து வீட்டுக் கிழவி ஓடி வந்தா. இவன் அடிக்கிறதப் பார்த்துட்டு உலக்கைய புடுங்கி எறிஞ்சா ..."ஏண்டா படுபாவி.. புதுசாக் கட்டிக்கிட்ட பொண்டாட்டிய இப்படிப் போட்டு அடிச்சிருக்கியே...பாரு உடம்பெல்லாம் எப்படி கொழுக்கட்டை மாதிரி வீங்கிப் போயிருக்கு" ன்னா.
அப்ப தான் அவன் புத்திக்கு உறைச்சது பலகாரத்தோட பேரு. பொண்டாட்டியப் பார்த்து "ங்கே " ன்னு சிரிச்சான். அவ எரிக்கறாப்ல முறைச்சா. தலையைக் குனிஞ்சுக்கிட்டு " இந்தா.. எனக்கு கொழுக்கட்டை செஞ்சு குடு" ன்னான்  .

Tuesday, March 26, 2013

ஆணும் பெண்ணும்....

தாம்பரம் ரயில்வே ஸ்டேஷனில் அருகருகே கூட்டம் வழிந்து கொண்டு  நான்கு வரிசைகள். மூன்றாவது வரிசையின் கடைசிக்கு சற்றே முன்னால்  பீச் போகும் டிரெயினுக்கு டிக்கட் எடுப்பதற்காக நின்று கொண்டிருந்தேன். ஆமை வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்த வரிசையை நோட்டம் விட்டுக் கொண்டே வந்தான் ஒருவன். வரிசையோடு ஒட்டி டிக்கட் கவுண்டரை நோக்கி நடந்தான். சட்டென்று வரிசையின் குறுக்கே புகுந்து கொள்ள  முயற்சி செய்தான். அங்கே நின்றிருந்தவரின் அதிர்ச்சி ரியாக் ஷனால் ஒரு நொடி தாமதித்தான். ஏற்கனவே கூட்டத்தில் கசகசத்து வியர்த்து வழிந்து கொண்டிருந்த எனக்கு இதைப் பார்த்ததும் எங்கிருந்து தான் அவ்வளவு கோபம் வந்ததோ ..." யோவ்... இத்தினி பேரு நிக்கிறாங்கள்ல ...கண்ணு தெரியில ? எங்களையெல்லாம் பார்த்தா எப்படி தெரியுது ...." என்று சத்தம் போட்டு எகிறினேன். இவ்வளவு நேரம் எல்லாத்தையும் பார்த்துக் கொண்டு பேசாமல் நின்றிருந்த நம் மக்கள், ஒரு குரல் கேட்டதும் பொங்கி எழுந்து விட்டனர். அவனை சங்கத் தமிழ் வார்த்தைகளால் வசை மாரி  பொழிந்தனர்.தாங்க முடியாமல் அவன்  தலையை தொங்கப்  போட்டுக் கொண்டு வரிசையின்  பின்னால் சென்று அமைதியாக நின்று விட்டான்.
அதே தாம்பரம் ரயில்வே ஸ்டேஷன். மற்றொரு நாள். ஆனால் கிழக்குத் தாம்பரம் பக்கம் இருக்கும் டிக்கட் கவுண்டர். இங்கே ஒரே வரிசை தான். அனுமார் வாழ் போல் நீண்டிருந்த வரிசையில் கடைசியில் பொய் நின்று கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி கவுண்டருக்கு முன்னால் நின்றிருந்த ஏழெட்டுப் பேருக்கு அப்புறம் நின்றிருந்தேன். எங்கிருந்தோ வந்தனர் மூன்று பெண்கள். வட நாட்டு (அழகான) இளம் பெண்கள். அட்டகாசமாக சேலை உடுத்தியிருந்தனர். ஏதோ  பங்ஷனுக்கு சென்று விட்டு வந்திருப்பார்கள் போல. அவர்களில்   ஒருத்தி மற்ற இருவரையும் இருக்க சொல்லி விட்டு அவள் மட்டும் வரிசையை நோக்கி வந்தாள். சற்றே  தயங்கியவள் நேராக கவுண்டரை நோக்கி சென்றாள். கையில் இரண்டு பத்து ரூபாய் நோட்டுக்கள். " Excuse me....." என்று சத்தம் போட்டுக்  கூப்பிட்டேன். வந்தாள்."Cant you see the queue? Please go and stand at the back" என்றேன்."But its very urgent.. we need to go"      என்றாள்.(வரும் போது மூன்று பெண்களும் சத்தமாக இந்தியில் பேசி சிரித்துக் கொண்டு வந்ததைப் பார்த்தேன்). பதிலுக்கு " EVery body has their own emergency. Please follow the queue"என்றேன்.முனகிக் கொண்டெ வரிசையின் கடைசி நோக்கி சென்றாள். இவ்வளவும் நடந்து முடியும் வரை....ஒரு பய வாயத் தொறக்கல. அவளை நான் வரிசையின் கடைசிக்கு அனுப்பியதும் எனக்கு முன்னால்  நின்று கொண்டிருந்த ஒரு 40+  ஆசாமி என்னைப் பார்த்த பார்வையை ( முறைத்தே எரித்து விடுவார் போலிருந்தது)  மறக்கவே முடியாது.
நம் மக்கள் வாழ்க.